அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்...

முகம்:

பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்' செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள்.

அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முகஅழகை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

சருமம்:

பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத்தன்மையை மட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியை அதிகம் வளரவிடக்கூடாது.
இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள்.

அழகுசாதனப் பொருட்கள்:

லிப்ஸ்டிக், புருவ மை, ஜிகினா துகள்கள், சென்ட், பவுடர் என ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அனைத்தையும் பெண்களைப்போல ஆண்கள் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பற்கள்:

புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும். டீ- காபி பருகுவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப்படுகிறது.

பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.

கூந்தல்:

ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.
முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

உடை:

உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்' செய்து அணிவது சிறந்தது.

இதுவும் முக்கியம்:

கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மையான அலங்காரம். நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.
நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல்பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.